தஞ்சாவூர், ஏப்.15: தமிழ் புத்தாண்டையொட்டி தஞ்சாவூர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
இதேப்போல் தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பெருவுடையாருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெரியநாயகி அம்மன், வராகி அம்மனுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் தஞ்சை பூக்காரத் தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில், கீழவாசல் வடபத்ரகாளியம்மன் கோயில், மேலவீதி சங்கரநாராயணசாமி கோயில், மூலைஅனுமார் கோயில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில், ரயிலடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
தஞ்சை கல்லணைக்கால்வாய் கரையில் உள்ள முனியாண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தஞ்சையில் உள்ள ஏராளமான கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
The post தமிழ்புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.